தானியங்கள்

அரிசி

உடலில் உள்ள எல்லா உறுப்புக்களுக்கும் உயிர்ச்சத்தை கொடுக்கக் கூடியதாக உள்ளது. மனிதனுக்கு தேவையான உணவில் அரிசி முக்கியப் பங்கு வகிக்கிறது.

பச்சை அரிசி

நெல் குற்றியதும் அரிசிச் சூடுதணிய வேண்டும். பாலிப்பையில் வைத்து மூட்டையாக்குவதோ, பெரிய டிரம் போன்றவற்றிலோ டின்னிலோ இருப்பு வைப்பதால் 10 நாட்களில் வண்டு, புழுவைத்துவிடும். கோணிப்பையில் மூட்டைகட்டி அதில் நொச்சித்தழைகளைப் போட்டால் வண்டு, புழு வைக்காது.

பச்சை அரிசி சாதம் உண்பவர்கள் சிறிது நெய் சேர்த்துண்ண வேண்டும்.

பச்சை அரிசி நொய்யுடன் பாசிப்பயிறு சேர்த்து கஞ்சியாக வைத்து குடிக்க களைப்பு நீங்கும். எளிதில் செரிமானம் ஆகும். பித்தம் கோபம் நீங்கும், நொய்யை மட்டும் நீர்க்க கஞ்சியாக்கி பால் சர்க்கரை கலந்து குடிக்க புத்தி கூர்மை உண்டாக்கும். பித்த எரிச்சல் நீங்கும்.

புழுங்கல் அரிசி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்ற உணவு நொய்யை கஞ்சியாக காய்ச்சி காய்ச்சல் கண்டவர்களுக்கு கொடுக்க சோர்வு நீங்கும் காய்ச்சல் தணியும் சாதம் சாப்பிட்டால் எளிதில் செரிமானம் ஆகும்.

கம்பு

கூழாக்கி மோருடன் சாப்பிட உடல் உஷ்ணம் குறையும் மலச்சிக்கல் நீங்கும், தாதுபலப்படும். மாவாக அரைத்து அடை, களி செய்துண்ணலாம்.

சோளம்

இதனை வேகவைத்தும், சோறுபோல் வடித்தும், கூழாக்கியும் சாப்பிடுவர். அடிக்கடி சாப்பிட்டால் செரிமான சக்தி குறையும் சொறி சிரங்கு உண்டாகும்.

கோதுமை

கோதுமையில், ரொட்டி பூரி, சப்பாத்தி, பரோட்டா செய்தும் பன், கேக், அல்வா செய்தும் சாப்பிடுவர். சத்துமிக்க உணவு. ரவை உப்புமா, பாதுஷா செய்தும் உண்பர். இனிப்பு வகைகள் அளவோடு சாப்பிடவேண்டும்.

கேழ்வரகு

கூழாகவும், களியாகவும், முருங்கக் கீரையுடன் அடை செய்தும் சாப்பிடலாம். தேகஉஷ்ணம் கூடும். உடல் பலம் பெறும் உடம்பில் கட்டி ஏற்பட்டால் இதன் களியை சிறிது வைத்துக் கட்ட குணமாகும்.

மக்காச் சோளம்

காசநோய் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தால் பலவீனம் குறையும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும், தாது கெட்டிப்படும். இதன் பொறியை சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பை அடக்கும்.

வரகு

சாதம் செய்து சாப்பிடுவர். பசியை மந்தப்படுத்தும் விரைவில் செரிமானம் ஆகாது. மலச்சிக்கலை உண்டாக்கும்.

ஜவ்வரிசி

வேகவைத்து கஞ்சியாக்கி சர்க்கரை சேர்த்து சாப்பிட மூலத்தால் உண்டாகும் வலிகுறையும் இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும். மலத்தை இளக்கும் உஷ்ணபேதிக்கு சிறந்த நிவாரணி. இதே கஞ்சியை இளசாக்கி பாலில்லாக் குழந்தைக்கு கொடுத்து வர குழந்தை புஷ்டியாக வளரும்.

பார்லி அரிசி

காய்ச்சல் கண்டவர்களுக்கு கஞ்சி வைத்துக் கொடுக்க குணமாகும். செரிமானத்தை அதிகப்படுத்தும் சிறுநீரைப் பெருக்கும். கர்ப்ப பெண்கள் கால் வீக்கம் வாட இதன் கஞ்சி சாப்பிடலாம்.

தினை

தினையை மாவாக்கி தேனுடன் சாப்பிட எலும்புகள் உறுதியாகும்.

எள்

நல்லெண்ணெய் தயாரித்து பலவகையில் உபயோகப் படுத்தப்படுகிறது. கொழுப்புச் சத்து குறைவு. இட்லிப் பொடியில் கலந்தும் உண்பர். உச்சியில் தினமும் 1/2 ஸ்பூன் எண்ணெய் அரக்கிவர உடல் உஷ்ணம் குறையும். இதனை வறுத்து, வெல்லம் கேழ்வரகு அடையுடன், ஏலக்காய் சேர்த்து இடித்து உருண்டையாக்கி சாப்பிட்டால் உடல் பருமனாகும். இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு என்பது முதுமொழி.

கொள்  

கொழுத்தவனுக்கு கொள்ளைக் கொடு என்பார்கள். பருப்பாக உடைத்து குழும்பு செய்து சாப்பிடலாம். சளி பிடித்தவர்கள் கொள்ளை வேகவைத்து தண்ணீரை இறுத்து ரசம் வைத்து சாப்பிட சளி முறியும். உடல் உஷ்ணம் கூடும். கொழுப்புச் சத்தைக் குறைத்து உடலை இளைக்கச் செய்யும்.

Scroll to Top