காய்கள்

வாடி வதங்கிய காய்களை சமைக்கக் கூடாது. காய்களை கழுவியோ அல்லது சுத்தமான வெள்ளைத் துணியால் துடைத்தபின் சமைக்கலாம்.

அவரைக்காய்

முற்றிய நிலையில் உள்ள காய்களை நோய் எதுவும் இல்லாதவர்கள், குழம்பு, பொரியல் செய்து சாப்பிடலாம். எலும்புகள் வளர்ச்சி பெறும். வெள்ளைப் பிஞ்சு அவரைக் காயை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். வாதம், பித்தம், கபம் நீக்கும். வாளவரையை சமைத்துண்ண சுவையாயிருக்கும். பித்தம் அதிகரிக்குமாதலால் அளவோடு உண்ண வேண்டும்.

அத்திக்காய்

இதன் காயை பிட்டு அவியல் செய்து பாசிப்பருப்பு பூண்டு சீரகம் போட்டு நெய்யில் தாளிதம் செய்து பகலுணவுடன் 2 பிடி சாதத்தில் பிசைந்து சாப்பிட மூலநோய் குணமாகும். நமைச்சல் அரிப்பு நீங்கும். இரண்டிரண்டாகப் பிளந்து உப்பு நீர் தெளித்து காய வைத்து இருப்பு வைத்துக் கொண்டு அவ்வப்போது சுண்டவத்தலை வறுப்பதுபோல் நெய்யில் வறுத்தும் சாப்பிடலாம்.

கத்தரிக்காய்

முற்றிய கத்தரி சமையலுக்கு சிறக்காது. கத்தரிக்கு காம்பில் ருசி என்பார்கள். அடிக்காம்பை அகற்றி மேல்தோலுடன் சமைக்க வேண்டும். நோய் உள்ளவர்கள் பிஞ்சு கத்தரிக்காயை சமைத்துண்ணலாம். பித்தம், மலச்சிக்கல் நீங்கும். நோயில்லாதவர் முற்றிய கத்தரிக்காயை சாப்பிட இரத்தத்தைக் கெடுக்கும்.

கொத்தவரைக்காய்

இதனை சமைத்துண்ண சிறுநீரைச் சுத்தப்படுத்தி வெளியேற்றும். உடல் சூட்டையும் பித்தத்தையும் அதிகப்படுத்தும்.

கோவைக்காய்

“கண்ணும் குளிர்ச்சி பெறும் காசமொரு வாயுவறும்

புண்ணும் சிரங்கும் புரண்டேகும் – நண்ணுடலம்

மீதலார் வெப்பகலும் விழிநீர்கட்டேகும்

கோதிலார் கோவை இலைக்கு” – சித்தர் பாடல்

இது கசப்புடையதாகும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நல்லது. நீரடைப்பு நீங்கும். தேகச் சூடுகுறையும். இருமல் நிற்கும். இதய நோய், மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த உணவாகும். இதன் காயை வாரம் 2 நாள் நல்லெண்ணெய், மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கூட்டாகவும், அவியல், கறி செய்தும், வற்றலாக்கியும், உண்ணலாம். இதன் இலைகளைப் பறித்து பாசிப்பருப்புடன் கலந்து வேக வைத்து அல்லது கூட்டாக செய்துண்ணலாம். மற்றக் கீரைகளுடன் கலவைக் கீரையாக கடையல் செய்தும் சாப்பிடலாம்.

கெடாரங்காய்

4 ஆக அறிந்து உப்பு சேர்த்து காய வைத்து ஊறு காயாக பயன்படுத்துவர்.  புளிப்புச்சுவை உள்ளது. நோயாளிகள் சாப்பிடக் கூடாது.

சுண்டைக்காய்

பால் சுண்டை, மலைச்சுண்டை என இருவகை உண்டு. பால் சுண்டக்காயை இரண்டிரண்டாக பிளந்து பருப்புடன் குழம்பு வைத்து சாப்பிடலாம். மலைச்சுண்டைக்காய் வற்றல் கடைகளில் விற்பார்கள். இதை மோருடன் உப்பு சேர்த்து ஊர வைத்து வெய்யலில் உலர்த்தி பாட்டலில் போட்டு மதிய உணவின் போது வறுத்து சாப்பிட மலக்கிருமிகளை அகற்றி வெளியேற்றும். வத்தல் குழம்பு செய்து சாப்பிடலாம். பித்தத்தை குறைக்கும். நீரிழிவு நோயாளிகள் சாப்பிட சர்க்கரை அளவு குறையும்.

சுரைக்காய்

கர்ப்பிணிப் பெண்கள் சமைத்து சாப்பிட கால் வீக்கம் இருந்தால் வாடிவிடும். சிறுநீர் தாராளமாக பிரியும் கடலைபருப்பு சேர்த்து கூட்டு செய்தும், வறுத்த மணிலாத்தூள் போட்டு பொறியல் செய்தும் சாப்பிடலாம். உடம்பில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.

தேங்காய்

இடியாப்பம், ஆப்பம் பால் எடுத்து சர்க்கரை சேர்த்து உண்பர். சட்னி செய்வர். துருவி பொறியல் கூட்டு, குழம்பு போன்றவற்றில் கலப்பர். தினமும் நான்கு பத்தை தேங்காய் உண்டுவர உடல்பருக்கும். மற்ற வகையில் பயன்படுத்த கீல்வாதம், இடுப்பு வலி, பாரிசவாதம், மூலம் வாய்நாற்றம் குணமாகும். அதிகமாக உணவில் சேர்க்க கொழுப்புசத்து அதிகமாகி இரத்தக்குழாய் அடைப்பு உண்டாகும்.

நூல்கோல் (அல்லது) டர்னிப்

இளஞ்சிவப்பு கலந்த பச்சை மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும். இதனை சாம்பாரில் போட்டு செய்வர் உடல் பலம் பெறும். பற்களுக்கு வலுவை சேர்க்கும்.

நெல்லிக்காய்

ஊறுகாய் செய்வார்கள். பலநோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இரும்பு சத்துமிக்கது. ஒரு காய் ஒரு ஆப்பிளுக்கு சமமாகும். தினமும் ஒரு காய் சாப்பிடலாம் பற்கள் உறுதிப்படும். வெய்யலில் உலர்த்தி சூரணம் செய்து தினமும் சாப்பிட நீரிழிவு நோய்க் கட்டுப்படும். மூலத்திற்கு நல்லது.

பரங்கிக்காய்

இதைக்கல்யாண பூசணி என்றும் கூறுவர். இதை பொறியல் செய்துண்ண நல்ல பசியுண்டாகும். அடிக்கடி உண்ணலாகாது.

பலாக்காய்

இதன் பிஞ்சினை மேல் தோல் செதுக்கிவிட்டு பொரியல் செய்து சாப்பிட உஷ்ணம் தணியும், பித்த மயக்கம், கிறுகிறுப்பு இவைகளைக் குணப்படுத்தும்.

பச்சைப் பட்டாணி

காயாக இருப்பதை வாங்கி உள்ளே இருக்கும் பட்டாணியை எடுத்து சமைக்க வேண்டும் (காய்ந்த பச்சை பட்டாணியை ஊறவைத்து கலர் கொடுத்து பாக்கெட்டில் விற்பதை வாங்கக் கூடாது) நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் இரத்த விருத்தியை உண்டாக்கும். இருமல், பித்தம் இவைகளைப் போக்கும். எலும்புகள் உறுதிப்படும்.

பப்பாளிக்காய்

இது மருத்துவத்துக்கு பயன்படுகிறது. காயைக் கழுவிவிட்டு கூட்டு (அல்லது) சாம்பார் செய்து சாப்பிட வாயு, மந்தம், உணவு செரியாமை, கர்ப்பப்பை கோளாறுகள், பல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். உடல் சூட்டை அதிகரிக்கும்.

பாகற்காய்

கசப்புள்ள காயாகும், பொரியல் செய்தும், புளிக்குழம்பு செய்தும் உண்பர். காயை விட பழமே சிறந்தது. இதை சமைத்துண்ண வயிற்றுப் பூச்சிகள் சாகும். வாயுவை கண்டிக்கும். குடல்பலம் பெறும், மல மிளக்கும், பித்தம் வெகுவாக குறையும். காயின் சாற்றைப் பருக நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும். காய்களை காயவைத்து குரணம் செய்தும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

பீர்க்கங்காய்

இதை அடிக்கடி சமைத்துண்ண சீதளம், பித்தம் அதிகரிக்கும் சிறுநீரைப் பெருக்கும்.

பீன்ஸ்

கறி செய்தும், குழம்பு செய்தும் சாப்பிடலாம். பசியை மந்தப்படுத்தும். பித்தம் அதிகரிக்கும்.

புடலங்காய்

உடலுக்கு வலுவைத்தரும். பொரியல் அல்லது கூட்டு செய்து சாப்பிடலாம் தேகவெப்பத்தைக் குறைக்கும்.

பூசணிக்காய்

சாம்பல் பூசணி என்றும், வெள்ளைப் பூசணி என்றும் சொல்வர். சாம்பாரில் போட்டும், மோர்க்குழம்பில் போட்டும் சாப்பிடலாம். கணச்சூடு நீங்கும். பெண்கள் வெள்ளைப்படுதல் நிற்கும் காச நோயாளிக்கு சிறந்த உணவாகும்.

பேரிக்காய்

கர்ப்பமுற்ற பெண்கள் தினமும் சாப்பிட தாகவரட்சி நீங்கும். கருவில் உள்ள குழந்தை நன்கு வளர்ச்சி பெறும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். உடல் குளிர்ச்சி பெறும்.

மாங்காய்

ஒட்டு, நீலம் போன்றவற்றை சாம்பார் செய்து உண்பர் சூட்டை அதிகரிக்கும்.  ஒரு முறை சாப்பிடலாம்.

முருங்கைக்காய்

வெந்து கெட்டது முருங்கை என்பர். அதிகம் வெந்தால் கசக்கும். முற்றிய காயை சமைத்துண்ண பித்தவாயுவை அதிகரிக்கும். முற்றிய காயை நோயாளிகள் சாப்பிடக் கூடாது. பிஞ்சுகாயை சமைத்துண்ண பித்தம் சளி, கபம் இவற்றை நீக்கும். ஆண்மை அதிகரிக்கும்.

முட்டைக்கோசு

கீரை இனத்தைச் சேர்ந்தவை. பொரியல், கூட்டு வைத்து சாப்பிடலாம். உடல் பருமன் குறையும் வாரத்தில் மூன்று நாளாக சாப்பிட்டு வர புற்று நோய் குணமாகும்.

மொச்சைக்காய்

அவித்தும், தோல் நீக்கி கொட்டைகளை குருமா குழம்பு செய்தும் சாப்பிடலாம் வாயுவை அதிகரிக்கும். எலும்புகள் உறுதிப்படும்.

பெங்களூர் கத்தரி

இதனை சௌ சௌ என்றும் கூறுவர். பொரியல், கூட்டு செய்வர். எலும்பு, பற்கள் உறுதியாக்கும். இருதயம் சீராக இயங்க உதவும்.

வாழைக்காய்

பிஞ்சு வாழைக்காய் மட்டுமே சமையலுக்கு ஏற்றது முற்றிய காய்களை பொரியல் செய்தும், சிலர் சாம்பாரில் போட்டும் உண்பர் வாயு, பித்தம் அதிகரிக்கும் பிஞ்சை சமைத்துண்ண வாந்தி, பித்தம், வரட்டு இருமல் குணமாகும்.

வெண்டைக்காய்

பொரியல் செய்தும், சாம்பாரில் போட்டும் உண்பர், உடல் சூட்டைக் குறைக்கும் நினைவாற்றல் பெருகும் மூளை வளர்ச்சியுறும் கண் எரிச்சல் நீங்கும். குழந்தைகள் பச்சையாக சாப்பிட பழக்க வேண்டும்.

வெள்ளரிக்காய்

இதனை பச்சையாக சாப்பிட நீரிழிவு நோய் கட்டுப்படும் இரத்தக் கொதிப்பை அடக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும், தாகத்தை தணிக்கும். இருதயத்திற்கு பலத்தைக் கூட்டும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். இரத்த ஓட்டம் சீராகும். கூட்டு செய்து சாப்பிட சுவையாக இருக்கும்.

3 thoughts on “காய்கள்”

Comments are closed.

Scroll to Top